மாநில முதல்வர்களுடன் ஜூன்-16, 17ல் கொரோனா பாதிப்பு குறித்து மோடி ஆலோசனை!

புதுடெல்லி:
கொரோனா பாதிப்பு, ஊரடங்கு நிலவரம் குறித்து வரும் 16. 17ம் தேதிகளில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாட்டில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இது வரை தொடர்கிறது.
தற்போது உள்ளது 5ம் கட்ட ஊரடங்காகும்.
இது, வரும் ஜுன் மாதம் 30ம் தேதி வரை நீடிக்கிறது.
இந்நிலையில், இந்த ஊரடங்கின் நிலவரம், தளர்வுகள் மற்றும் கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் ஜூன் – 16, 17ம் தேதிகளில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச முதல்வர்களுடன் காணொளி மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளார்.
வரும் ஜூன் 16ம் தேதி பஞ்சாப், அசாம், கேரளா, உத்தரகாண்ட், சட்டீஸ்கர், திரிபுரா, இமாச்சல பிரதேசம், கோவா, மணிப்பூர், நாகலாந்து, புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம், மேகாலயா, சிக்கிம், மிசோரம் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
லடாக், அந்தமான் நிகோபர், தாதர் நகர் ஹவேலி, டாமன் டயூ மற்றும் லட்சத்தீவு துணை நிலை ஆளுநர்களுடனும் அவர் அன்றைய தினம் ஆலோசனை நடத்துகிறார்.
அதற்கு மறுநாள், கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு, புதுடெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, பீகார், ஆந்திரா, அரியானா, தெலங்கானா, ஒடிசா முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அன்றைய தினமே ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநருடனும் ஆலோசனை நடத்துகிறார்.
மத்திய அரசு இதுவரை மாநில முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் ஐந்து முறை ஆலோசனை நடத்தி உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
















