கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்க்கு நிதி திரட்ட மோடியின் 1800 நினைவு பரிசுகள் ஏலம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட 1800 நினைவு பரிசுப் பொருட்கள், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் ஏலம் விடப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட சுமார் 1800 நினைவு பரிசுப் பொருட்கள் மற்றும் அன்பளிப்புகள் ஏலத்திற்கு வந்துள்ளன.
இதில் சிற்பங்கள், ஓவியங்கள், சிலைகள், தலைப்பாகைகள், சால்வைகள் என பல்வேறு பொருட்கள் இடம்பெற்றுள்ளன. ஏலத்திலிருந்து கிடைக்கும் தொகையானது, கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கப்படவுள்ளது. ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் ஆன்லைன் வாயிலாகவும் கலந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பதவிகளில் இருப்போருக்கு கிடைக்கும் அன்பளிப்புகள் மற்றும் நினைவுப்பொருட்கள் அரசுக் கருவூலத்தையே சேரும். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த பொருட்களை ஏலம் விட்டு, உத்தரப் பிரதேச மாநிலத்தில் கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருட்கள் மற்றும் நினைவுப்பரிசுகள் இன்று முதல் இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. முன்னதாக, இதுபோன்ற பொருட்கள் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் ஏலம் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.