இந்தோனேசியா டெர்னட்டே நகரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவு

இந்தோனேசியா நாட்டின் டெர்னட்டே நகரின் அருகே இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. இதனால் வீட்டில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு வெளியே வந்தனர்.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் புவியியல் அமைப்பின்படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் வடக்கு மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டெர்னட்டே நகரின் வடக்கே – வடமேற்கு 175 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் பயங்கரமாக குலுங்கியதால் , வீட்டினுள் இருந்த மக்கள் உயிர் தப்புவதற்காக வீதிக்கும் திறந்தவெளிக்கும் ஓட்டம் பிடித்தனர். சில நேரம் வரை திரந்த வெளியிலேயே மக்கள் திரளாக கூடி நின்றனர்.
இன்று உண்டான இந்த நிலநடுக்க பாதிப்பு மற்றும் சேதம் பற்றி எந்த தகவல்களும் வெளியாகவில்லை. மேலும் சுனாமி பற்றிய எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை.
இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளுக்கு இடையில் கடந்த மாதம் எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.















