சித்ரவதை தடுப்புச் சட்ட மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும்..! அமித் ஷாவுக்கு திமுக கோரிக்கை!
DMK request amit sha over lockup death issue
டெல்லி:
சித்ரவதை தடுப்புச் சட்ட மசோதாவை, நாடாளுமன்றத்தில், உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, திமுக கோரிக்கை வைத்துள்ளது.
நாடாளுமன்ற தி.மு.க., கொறடாவும், மூத்த எம்.பி.,யுமான ராஜாவிடமிருந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்திற்கு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில், கூறப்பட்டு உள்ளதாவது:
சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நம் நாட்டில், காவல்நிலைய விசாரணைகளின் போது ‘லாக் அப்’ மரணங்கள் இன்னமும் நிகழ்ந்து கொண்டிருப்பது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கைது செய்யும் போதும், அதன்பிறகு விசாரணை நடத்தும்போதும், போலீசார் எந்தவிதமான வழிமுறைகளை கையாள வேண்டுமென்ற விதிகள் வகுக்கப்பட்டு, அவை சட்டமாகவும் உள்ளன.
சட்டத்தின் கீழ் கைது செய்யும் உரிமை, போலீசாருக்கும் இருப்பதை போலவே, தன் மீது மனித உரிமை மீறல்கள் நடக்காதபடி, தன்னை காத்துக் கொள்வதற்கான உரிமை, கைதானவருக்கும் உள்ளது.
அதற்காகவே, 1994ல் தாக்கலான, சட்டக் கமிஷனின், 152வது அறிக்கையில், குற்றவியல் சட்ட நடைமுறைகள் குறித்து, பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டு, அதற்கேற்ப பார்லிமென்டிலும், திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்பின்பும், சித்ரவதைகள் தொடரவே, நீதிபதி சவுகான் தலைமையிலான சட்டக் கமிஷனின், 273வது அறிக்கையின்படி, புதிய பரிந்துரைகளை ஏற்று, 2017ல், சித்ரவதை தடுப்புச் சட்ட மசோதா, வடிவமைக்கப்பட்டது.பல்வேறு காரணங்களால், அது கிடப்பிலேயே கிடக்கிறது.
சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள், தொடரும்போது இனியும் காலதாமதம் செய்யக்கூடாது. எனவே, வரும் கூட்டத்தொடரில், அம்மசோதாவை நிறைவேற்ற வேண்டும் அல்லது ஜனாதிபதி மூலமாக அவசர சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.