கடையை தள்ளிவிட்டதால் காத்திருப்போர் பட்டியல்…!தாமசின் நிலைமை இப்படியாகி போச்சே..!
Vaniyambadi Thomas waiting list

வாணியம்பாடி:
தள்ளுவண்டிக் கடை வியாபாரிகளிடம் தமது அதிகாரத்தை காட்டி அத்துமீறலில் ஈடுபட்ட வாணியம்பாடி நகராட்சி ஆணையர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், தள்ளுவண்டி பழக்கடைகளை சேதப்படுத்திய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு கட்டத்தில் பிரச்னை பெரிதானதால் வேறு வழியின்றி பழக்கடைக்காரர்களிடம் வருத்தம் தெரிவித்து,சேதப்படுத்திய பழங்களுக்கான நஷ்ட ஈட்டையும் கொடுத்தார்.
இருப்பினும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க திமுக எம்பி கனிமொழி உட்பட பலர் வலியுறுத்தி வந்தனர். சமூக வலைத்தளங்களில் அவர் மீதான கண்டனங்கள் வலுத்தன.
இந்த நிலையில் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வாணியம்பாடி நகராட்சி புதிய ஆணையராக மேல்விஷாரம் நகராட்சி பொறியாளர் பாபு பொறுப்பு வகிப்பார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
வாணியம்பாடி ஆணையர் அத்துமீறல் குறித்து மாநில மனித உரிமை கமிஷன் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசுக்கு 14 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.















