
மும்பை
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகளில் 80% பேருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது.
இன்று மட்டும் 440 பேர் அதிகரித்து பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 8068 ஆகி உள்ளது.
இன்று மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்து மொத்தம் 342 பேர் இதுவரை உயிர் இழந்துள்ளனர்.
இதுவரை 1118 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 42 பேர் குணம் அடைந்துள்ளனர்
இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டோரில் கால்பங்கு மகாராஷ்டிராவில் மட்டுமே உள்ளனர்.
இம்மாநிலத்தில் அதிக அளவில் மும்பை நகரில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறும்போது,
தற்போது மாநிலத்தில் நிலவி வரும் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து வரும 30 ஆம் தேதிக்குள் முடிவு எடுப்போம்.
. இது குறித்த கணக்கெடுப்புக்களை நான் இன்று மாலை ஆய்வு செய்ய உள்ளேன்.
தற்போதுள்ள நிலையில் மருத்துவர்கள் தங்கள் சிகிச்சையகங்களை உடனடியாக திறந்து மற்ற நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும்.
குறிப்பாக டயாலிசிஸ் போன்றவற்றை உடனே தொடங்க வேண்டும்.
தற்போது ஊரடங்கு நிலவுவதால் மக்களில் சிலர் பொறுமை இழந்து தவிக்கின்றனர்.
ஆனால் தற்போது உள்ள சூழ் நிலையில் இதைத் தவிர வேறு வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் முகக் கவசத்துடன் வெளியே நடமாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரில் 80% பேருக்கு எந்த விதமான அறிகுறிகளும் தென்படவில்லை.
எனவே எக்காரணம் கொண்டும் பாதுகாப்பை அலட்சியம் செய்ய வேண்டாம்.
கூட்டமாக ஒருபோதும் கூட வேண்டாம். லேசாக ஜுரம், ஜலதோஷம் இருந்தாலும் அவசியம் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளவும்’ இவ்வாறு மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.















