தமிழகத்தில் மே 3ம் தேதி வரை இதே கட்டுப்பாடுகள் தொடரும்!
சென்னை: தமிழகத்தில் தற்பொழுது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3ம் தேதி வரை தொடரும் என முதல்வர் இபிஸ் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் முதல்வர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
கடந்த ஏப்ரல்.,15ம் தேதி மத்திய அரசின் ஆணையில், ஏப்ரல்.,20க்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
டில்லி, கர்நாடகா, உள்ளிட்ட சில மாநிலங்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவலினை கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து கடைபிடிக்க முடிவு செய்துள்ளன.
தமிழகத்தில், அரசு நியமித்த வல்லுநர் குழுவுடனான ஆலோசனையின் முடிவில், மாநில பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3ம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழக அரசு இன்று முடிவு செய்து அறிவித்துள்ளது.
அத்யாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அரசால் அளிக்கப்பட்ட விதி விலக்கு தொடரும் என்றும், நோய் தொற்று குறைந்தால், வல்லுநர் குழுவின் ஆலோசனையினை பெற்று, நிலைமைக்கு தகுந்தாற்போல் முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.