மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு காலை 4.30 மணி முதல் இரவு 11 வரை…

மெட்ரோ ரயில் காலை 4.30 முதல் இரவு 11 மணி வரை செயல்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது மெட்ரோ ரயில் பயணிகள் சேவை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடந்து வருகிறது.
சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காவும் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது மெட்ரோ ரயில் பயணிகள் சேவை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடந்து வருகிறது. இந்த நிலையில் மீனப்பாக்கத்தில் உள்ள உள்நாடு, வெளிநாடு விமான நிலையம் மற்றும் எழும்பூர், சென்ட்ரலில் உள்ள எக்ஸ்பிரஸ் நிலையங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் அதிகாலையில் வருகின்றனர். இந்த பயணிகளை கவரும் வகையில் மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
விமானம் – ரயில் நிலைய பயணிகளின் வசதிக்காக விரைவில் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை நீட்டிக்கப்பட உள்ளது. விரைவில் முறைப்படி மெட்ரோ ரெயில் நிர்வாகம் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது.

தற்போது மெட்ரோ ரயில் சேவை, கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மற்றும் சின்னமலை முதல் விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையில் செயல்பட்டு வருகிறது.
திருமங்கலம் முதல் சென்ட்ரல், சைதாப்பேட்டை முதல் டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.
விரைவில் டி.எம்.எஸ் – வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது.















