விமான கட்டணம் மூன்று மடங்கு உயரும் அபாயம்!
புதுடெல்லி:
கொரோனா பாதிப்பை தடுக்க, விமானத்திலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால், விமான கட்டணங்கள் மூன்று மடங்கு உயரும் உள்ளது.
கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட துறையில் விமான துறை முதன்மையான ஒன்று.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டு விட்டது.
இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, வரும் மே 3ம் தேதி வரை அமலில் உள்ளது.
அதன்பிறகு விமான சேவையை தொடங்குவதற்கு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
தற்போதைய வழக்கமான திட்டத்தின்படி, செக் இன், விமான புறப்பாட்டுக்கு 3 மணி நேரம் முன்பாக தொடங்கி, ஒரு மணி நேரம் முன்பு முடிந்து விடும்.
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதால் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்களை வீட்டிலேயே பிரின்ட் எடுத்து வர வேண்டும் அல்லது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்., அவர்களுக்கான பேருந்திலும், விமானத்திலும் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர அனுமதிக்கக்கூடாது என நிறுவனங்கள் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, விமான இருக்கைகளை முழுவதுமாக நிரப்ப முடியாது. பாதி இருக்கைகள் காலியாகத்தான் வைத்திருக்க வேண்டும். உதாரணமாக 72 இருக்கைகள் கொண்ட ஏடிஆர்-72 விமானத்தில் 36 இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட உள்ளன.
இதுபோல் ஏ320 விமானத்தில் 120 இருக்கைகள்தான் நிரப்பப்பட உள்ளன. அதாவது, ஒவ்வொரு பயணிக்கும் அவருக்கு அருகில் உள்ள இருக்கைகள் காலியாகவே இருக்கும்.
சில விமான நிறுவனங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறியுள்ளன. மற்ற நிறுவங்கள் இதை செயல்படுத்த திட்டமிட்டு வருகின்றன.
இவ்வாறு விமான இருக்கைகளிலும், விமான நிலைய முனையத்திலும் சமூக இடைவெளி பேண வேண்டி உள்ளது. விமானங்களில் கழிவறைகளை பயன்படுத்துவதை பயணிகள் குறைத்துக்கொள்ள அல்லது தவிர்த்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட உள்ளனர்.
இதுகுறித்து விமான நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுவதாவது: அரசு அறிவுறுத்தலின்படி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம். இதனால், ஒவ்வொரு விமானத்திலும் பாதி விமான இருக்கைகள் காலியாக வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கொரோனாவால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன. பாதி இருக்கைகள் காலியாக வைத்திருப்பதால், விமான கட்டணங்களை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை.
பயணிகள் கூட்டமாக கூடுவதை தடுக்க விமானம் இயக்கும் நேரங்களிலும் மாற்றம் செய்யப்படும்.
இதன்படி, விமான நிலைய முனையங்கள் மற்றும் நுழைவாயில்களில் பயணிகள் சமூக இடைவெளியை கண்டிப்பாக பேண ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது என்று கூறினர்..