புதுச்சேரியில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை வரை ஊரடங்கு அமல்…!
Pondycherry total lockdown today
புதுச்சேரி:
புதுச்சேரியில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையிலான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் அவ்வப்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி புதுச்சேரியில் நாள்தோறும் காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த சில வாரங்களாக தொற்று பரவும் வேகம் அதிகரித்ததால் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழுவில் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்துவது, கடைகள் திறப்பு நேரத்தை காலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை மட்டுமே அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி புதுச்சேரி மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 7 மணி முதல் இந்த ஊரடங்கு தொடங்கிவிட்டது. நாளை (புதன்கிழமை) காலை 6 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
ஊரடங்கின்போது பால் பூத்துகள், மருந்துக் கடைகள் மட்டும் திறந்து இருக்கும். அதேபோல் கியாஸ் வினியோகம் செய்யலாம். பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் மூடி இருக்கும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது. ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.