கோயம்பேடு சந்தை இனி இயங்குமா..? முக்கிய அறிவிப்பு வெளியீடு
Koyambedu vegetable sellers dissatisfied
சென்னை: வரும் 10ம் தேதி வரை கோயம்பேடு சந்தை செயல்படாது என்று வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரிக்க கோயம்பேடு மார்க்கெட் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை தொடர்ந்து, கோயம்பேடு மார்க்கெட்டை மூடுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. இந்நிலையில், கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்டதற்கு காய்கறி வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:
திருமழிசையில் அரசு உரிய வசதி செய்து தரவில்லை. தமிழக அரசானது தங்களை அழைத்து சென்று திருமழிசையில் ஆய்வு செய்ய வேண்டும். ஒரே நாளில் சந்தையை திருமழிசைக்கு மாற்ற முடியாது.
சந்தையை திடீரென திருமழிசைக்கு மாற்றுவதால் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன. எங்களுக்கு தொழில் முக்கியமல்ல. உயிர்தான் முக்கியம். திருமழிசையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த காய்கறி விற்பனை கிடையாது. வரும் 10ம் தேதி வரை கோயம்பேடு சந்தை செயல்படாது. சந்தையை மாற்றுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு இன்று ஆலோசனை நடத்துகிறது என்றார்.