திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்!
சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் சென்னையில் காலமானார்.
தமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் அவதிபட்டு வந்த நிலையில், அதற்காக அவ்வப்போது டயாலிசிஸ் சிகிச்சை செய்து கொண்டு வந்தார்.
இந்தச் சூழலில், மகேந்திரனின் உடல்நிலை திடீரென கடந்த புதன்கிழமை மோசமடைந்தது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் மகேந்திரன்(79) சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட எண்ணற்ற படங்களை இயக்கியவர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.