என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் பதிவு….! 1 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டி ஆச்சர்யம்!
Engineering courses application crosses 1.5 lakh in tamilnadu
சென்னை:
என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு 1 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் இந்த கலந்தாய்வை தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
அதன்படி, என்ஜினீயரிங் படிப்பில் சேர ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 15-ந்தேதி மாலை 6 மணிக்கு தொடங்கியது. சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு விண்ணப்ப பதிவு தொடங்கிய ஒரு வாரத்திலேயே ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்தன.
தற்போதும் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் விண்ணப்ப பதிவு தொடங்கியதில் இருந்து நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 7 பேர் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு பதிவு செய்து உள்ளனர்.
அவர்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 71 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்ப பதிவு செய்து இருந்தனர். ஆனால் இந்த ஆண்டில் விண்ணப்ப பதிவு முடிவதற்கு இன்னும் 4 நாட்கள் இருக்கும் நிலையில், தற்போதே விண்ணப்ப பதிவு 1½ லட்சத்தை தாண்டியுள்ளது.
விண்ணப்பங்களை மாணவர்கள் பதிவு செய்ய வருகிற 16-ந்தேதி கடைசிநாள் ஆகும். மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வருகிற 20-ந்தேதி கடைசி நாளாக உள்ளது.