குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனாவா? அனைவருமே தனிமைப்படுத்துதல் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
Chennai corporation new announcement about corona status
சென்னை:
சென்னையில் குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானால் குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இனி வரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பொதுமக்கள், பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவரது வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் புதிய நடைமுறைப்படி, அவர்கள் வழக்கம் போல் அவரது பணியினை, தமிழக அறிவித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியும், தனிமனித இடைவெளியை பின்பற்றியும் முகக்கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை அணிந்தும் மேற்கொள்ளலாம்.
மேலும் கொரோனா பரிசோதனை முடிவில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால், பரிசோதனை மேற்கொண்ட நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அவர்களுக்கான அனைத்து ஸ்க்ரீனிங் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவரின் ஆலோசனையின்படி, மருத்துவமனைகளிலோ , கோவிட் 19 பாதுகாப்பு மையங்களிலோ அல்லது அவர்களின் இல்லங்களிலோ தனிமைப்படுத்தப்படுவார்கள் என ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.