தேர்தல் செலவு பற்றிய விவரங்களை தாக்கல் செய்யாத 493 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் – தேர்தல் ஆணையம்
உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவு பற்றிய கணக்குகளை தாக்கல் செய்யும்படி தேர்தல் வாரியம் உத்தரவிட்டிருந்தது, அதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது நடத்தப்பட்ட தேர்தலில் தோல்வி அடைந்த 493 வேட்பாளர்கள் , குறித்த காலக்கெடுவிற்குள் தேர்தல் செலவு பற்றிய விவரங்களை தாக்கல் செய்யவில்லை.
அதனால் அவர்கள் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முசாபர்நகர் மாவட்டத்தில் மட்டும் 6 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரமேஷ் சந்த் ராய் பேசுகையில் ,” தேர்தல் செலவு பற்றிய கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய தவறியதால் 493 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் அடுத்து 3 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது. இந்த நடவடிக்கை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தேக்கப்பட்டுள்ளதாக” கூறினார்.