கபசுரக் குடிநீரும் நிலவேம்பு கஷாயமும் அவசிய பானமாக உள்ள இந்த காலகட்டத்தில், மூலிகை தேநீர் என்றாலே முப்பது மைல் ஓடத்தான் தோன்றும். என்ன இருந்தாலும் பாலை நன்றாகக் காய்ச்சி, இறக்கி வைத்திருக்கும் டீ அல்லது காபி டிகாக்க்ஷனில் தேவையான சர்க்கரையுடன் கலந்து நல்ல சூட்டில், ரசித்து குடிப்பது போல் மூலிகை தேநீரை குடிக்க முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். காதை கிட்ட கொண்டு வாருங்கள், எனக்கும் கூட சாதாரண (??) காபி, டீ குடிப்பதில் ரொம்பவே ஈடுபாடுதான். ஆனால், அதெல்லாம் பழைய கதை. மூலிகை தேநீரின் அறிமுகம் கிடைத்த பின், காபி, டீயெல்லாம் உறவினர் வீடுகளுக்கும் உணவகங்களுக்கும் போகும்போது மட்டும்தான். கொரோனா அதற்கும் ஆப்பு வைத்து விட்டதால் இப்போது எல்லா வேளையிலும் மூலிகை தேநீர் மட்டும்தான். மூலிகை தேநீரின் நன்மைகள் மட்டுமல்ல, அதன் சுவையும் உங்களை கண்டிப்பாக ஈர்க்கும், என்னை ஈர்த்தது போல்.
மூலிகை தேநீரின் நன்மைகள்
தொடர்ந்து மூலிகை தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் சில:
- நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது
- சளியை போக்குகிறது
- இருதயத்தை பலப்படுத்துகிறது
- புற்று நோயை தவிர்க்கிறது
- இளமையான தோற்றத்தை தருகிறது
- சரும நலத்தை பாதுகாக்கிறது
- மன அழுத்தத்தை குறைக்கிறது
3 சுவையான மூலிகை தேநீர்(Herbal Tea)
மூலிகை தேநீரில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றுமே தனித்துவமான சுவையையும் எண்ணற்ற நன்மைகளையும் கொண்டது. இப்போது நாம் அனைவரது சமையலறையிலும் பொதுவாக இருக்கக்கூடிய மூன்று மூலிகைகளை வைத்து தேநீர் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
1) இஞ்சி தேநீர்
எளிதில் கிடைக்கக்கூடிய இஞ்சியை பயன்படுத்தி நீங்கள் சுவையான, சத்தான தேநீரை தயாரிக்கலாம்.
இஞ்சி தேநீர் தயாரிக்கும் முறை
- ஒரு அங்குல அளவுக்கு இஞ்சியை எடுத்து நன்றாகக் கழுவி தோலை சீவவும்.
- சீவிய பிறகும் நன்றாக அலசி, இஞ்சியை தட்டிக் கொள்ளவும்; அல்லது பொடிப்பொடியாக நறுக்கியும் போடலாம்.
- ஒரு டம்ளர் தண்ணீரில் இஞ்சியை போட்டு அடுப்பில் ஏற்றவும்.
- கொதிக்க தொடங்கியதும், தீயை நன்றாகக் குறைத்து மேலும் 2 அல்லது 3 நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.
- பின், அடுப்பை அணைத்து, தேநீரை வடிகட்டவும்.
- தேன் / நாட்டு சர்க்கரை / வெல்லம் சேர்த்தால் சுவையான இஞ்சி தேநீர் தயார்.
இஞ்சி தேநீரின் பயன்கள்
- நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது
- சளியை கரைக்கிறது
- வயிற்று உப்புசத்தை போக்குகிறது
- சீரணத்தை பலப்படுத்துகிறது
- ஆற்றலை அதிகப்படுத்துகிறது
- அதிக உடல் எடையை குறைக்க உதவுகிறது
2) புதினா தேநீர்
சுவையையும் மணத்தையும் கூட்ட உணவில் புதினா சேர்ப்பவர்கள் கவனத்திற்கு: பச்சை பசேலென்று வாங்கி வந்த புதினாவை, பிரியாணிக்கு என்றும் தொகையலுக்கு என்றும் ஒதுக்கி வைக்காமல் கொஞ்சம் தேநீர் தயாரித்து குடித்து பாருங்கள்.
புதினா தேநீர் தயாரிக்கும் முறை
- 10 முதல் 15 புதினா இலைகளை நன்றாக மண் போக அலசி எடுத்து கொள்ளவும்.
- ஒரு டம்ளர் தண்ணீரில் கழுவிய புதினா இலைகளை சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதிக்க தொடங்கியதும், தீயை குறைத்து, சுமார் 3 நிமிடங்களுக்கு வைக்கவும்.
- பின் அடுப்பை அணைத்து, வடிகட்டி, சுவைக்காக சிறிது தேன் சேர்த்து பருகவும்.
புதினா தேநீரின் நன்மைகள்
- சீரணத்தை பலப்படுத்துகிறது
- சளியை போக்குகிறது
- குமட்டலை தடுக்கிறது
- நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துகிறது
- வயிற்று கோளாறுகளை சரி செய்கிறது
- வாய் துர்நாற்றத்தை போக்குகிறது
- பொடுகுத் தொல்லையை போக்குகிறது
3) துளசி தேநீர்
வீட்டுத் தோட்டத்தில் துளசிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. துளசி மருத்துவ குணத்துக்கு பேர் போனது. இதோ உங்களுக்காக துளசி தேநீர்.
துளசி தேநீர் தயாரிக்கும் முறை
- கைப்பிடி அளவு துளசி இலைகளை எடுத்து நன்றாகக் கழுவிக் கொள்ளவும்.
- ஒரு டம்ளர் தண்ணீரில் கழுவிய துளசி இலைகளை சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
- துளசி தண்ணீர் கொதிக்க தொடங்கியதும், தீயை சிறிதாக்கி மேலும் சில நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டி சிறிது தேன் சேர்த்து பருகவும்.
பலன்கள்
- சளி, இருமலை போக்குகிறது
- நுரையீரலை பலப்படுத்துகிறது
- அசீரண கோளாறுகளை போக்குகிறது
- வாந்தியை போக்குகிறது
- வயிற்று போக்கை சரி செய்கிறது
- சுரத்தை தணிக்கிறது
- சரும நலத்தை மேம்படுத்துகிறது
- மனதை அமைதிப்படுத்துகிறது
வரும் வாரங்களில் மேலும் பல மூலிகை தேநீர் தயாரிப்பு பற்றியும் அவற்றின் பலன்கள் பற்றியும் பார்க்கலாம்.