1,064 ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து விவசாயி ஆவேசம்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி தன் நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயம் ரூ.1,064க்கு விலை போனதால், விரக்தியடைந்த அவர், அந்த பணத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி, தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
நாசிக் மாவட்டம் நிபாட் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் சாதே என்ற விவசாயிதான் தனது ஆத்திரத்தையும், நாட்டின் விவசாயிகள் நிலையையும் பிரதமருக்கு உணர்த்த இவ்வாறு செய்துள்ளார்.
நாசிக் மாவட்டம், நாட்டின் வெங்காயத் தேவையை 50 சதவீதம் நிறைவு செய்கிறது. இங்கு வெங்காயம் விளைச்சல் அதிகமாகும். இந்நிலையில் விவசாயி சஞ்சய் சாதே தன் நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை நாசிக்கில் உள்ள மொத்தவிலை சந்தைக்கு விற்பனைக்காக கடந்த வாரம் கொண்டு சென்றார். ஆனால், அங்கு வெங்காயம் கிலோ ஒரு ரூபாய்க்கு மேல் விலைக்கு எடுக்க யாரும் முன்வரவில்லை.
பின், பேரம்பேசி கிலோ ரூ.1.40 பைசாவுக்கு விற்பனை செய்தார். அதன் மூலம் கிடைத்த 1,064 ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி தனது வேதனையையும் நாட்டில் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு விலை கிடைக்காமல் நலிவடைவதையும் உணர்த்தினார். அதுமட்டுமல்லாமல் மணிஆர்டர் அனுப்பக் கூடுதலாக ரூ.54 செலவானது என்றும் தெரிவித்தார்.















