ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு இடைக்காலத் தடை நீக்கி உத்தரவு- உயர்நீதிமன்றம்

ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு விதித்திருந்த இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதைத் தடைசெய்யக் கோரி தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஓன்று தொடரப்பட்டிருந்தது. அதில் சரியான மருத்துவச்சீட்டு இல்லாமலும், காலாவதியான போலி மருந்து மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும், பொதுமக்கள் இதனால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும், மேலும் மருந்து விற்பனை செய்ய வேண்டும் என்றால் மருத்துவர் பரிந்துரை செய்யவேண்டும் என விதி உள்ளது. இந்த விதிகள் எதையும் ஆன்லைன் விற்பனையாளர்கள் கடைபிடிப்பதில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை கடந்த 17-ஆம் தேதி விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை வகுக்கும் வரை அதன் மீதான தடை தொடரும் என உத்தரவிட்டிருந்தார். மேலும் ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பாக மத்திய அரசு ஜனவரி 31-ஆம் தேதிக்குள் புதிய விதிமுறைகளை வகுக்கவும் உத்தரவிட்டப்பட்டது.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் மருந்து வணிக நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும், வருகின்ற ஜனவரி 31-ம் தேதிக்குள் வரைவு விதிமுறைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புதிய விதிகள் வகுக்கும் வரை ஆன்லைனில் மருந்தை விற்கலாம் என கூறி ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கபட்டிருந்த இடைகால தடையை நீக்கி உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.















