ஆன்மீக வரலாற்றில் முதல்முறை..! பக்தர்களின்றி மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்
No devotees in Madurai meenakshi temple marriage

மதுரை: பிரபல மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றுள்ளது.
உலகப்புகழ் பெற்ற விழாக்களில் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா. மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.
ஆனால், இந்த முறை உலகத்தையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ், மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவையும் ரத்து செய்ய வைத்திருக்கிறது. இதையடுத்து, திருக்கல்யாணம் மட்டும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆன்மீக வரலாற்றில் முதல் முறையாக சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில் மீனாட்சி கல்யாணம் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது. இந்த வைபவமானது மீனாட்சியம்மன் கோயில் இணையதளமான www.maduraimeenakshi.org-ல் நேரடியாக ஒளிபரப்பானது.
இந்த இணையதளம் வழியே, பக்தர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே, மீனாட்சி திருக்கல்யாணத்தை கண்டு பரவசம் அடைந்தனர். வழக்கமாக திருக்கல்யாணம் முடிந்தவுடன் அழகர்கோவில் சித்திரை திருவிழா தொடங்கும். ஆனால் கொரோனா பாதிப்பால் அந்த விழாவும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.















