கூகுள் மேப்பின் உதவியுடன் கோவில்களில் கொள்ளையடித்த கும்பல் பிடிபட்டது !!
தொழில் நுட்பம் தற்போது நம் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் செயல்களை எளிமையானதாக்கி உள்ளது. இதன் மூலம் வீட்டில் இருந்த படியே பொருட்களை வாங்குவது , மற்றும் ஆன்லைன் வழியே உணவை ஆர்டர் செய்து வரவழைத்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி நமக்கு தெரியாத இடத்திற்கு செல்லவேண்டுமெனில் அதற்கும் கூகுள் மேப் உதவியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இத்தகைய உதவியை செய்யும் இந்த கூகுள் மேப்பினை பயன்படுத்தி கோவில்களில் கொள்ளையடிக்கும் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில், மைசூர்,மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வசித்து வந்த 5 நபர்களை கொண்ட கும்பல் ஒன்று கோவில்களை கொள்ளையடிக்கும் திட்டத்தை தீட்டி வந்துள்ளது. கடந்த செப்டம்பரிலிருந்து 5 மாதங்களாக கொள்ளையடிக்கும் இந்த கும்பல் 19-லிருந்து 26 வயதுடையவர்களாக உள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்திற்காகவே பக்தர்கள் அதிகம் வராத கோவில்களை தேர்ந்தெடுப்பார்கள். தங்களுக்கு வழி தெரியாத கோவில்களை கூகுள் மேப்பின் வழியாக செல்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார்கள். இதுவரை மைசூர் நகரில் 2 கோவில்களிலும், சாமராஜநாகரில் 9 கோவில்களிலும் இருந்து ரூ.2.9 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடியுள்ளனர்.
இத்தகைய கொள்ளை சம்பவம் அடிக்கடி நடந்ததால் சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டது. தீவிர தேடுதலுக்கு பிறகு இந்த கொள்ளைக்காரர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையுல் அவர்கள் தொழில் முறை கொள்ளைக்காரர்கள் இல்லை என்றும். வெவ்வேறு வேலைகளில் இருந்த அவர்கள் இந்த கோவில் கொள்ளைக்காகவே ஒன்று சேர்ந்ததாக தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.