பச்சை மண்டலத்துக்கு மாறும் கொங்கு மண்டலம்!!
No corona cases in Kongu districts

சேலம்: சேலம் மாநகராட்சியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளதால் அங்கு கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஏப்ரல் 24ம் தேதிக்குப் பின்னர் சேலம் மாநகர் பகுதிகளில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேரும் நலமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா இல்லாத மாநகராக சேலம் உருவெடுத்துள்ளது. கடந்த 62 நாள்களில் 30 ஆயிரம் கிலோ பிளீச்சிங் பவுடர் மாநகரில் தெளிக்கப்பட்டுள்ளது.
120 வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விநியோகிக்கப்பட்டது. பொது கழிப்பறைகள் நாள் ஒன்றுக்கு மூன்று முறை சுத்தம் செய்யப்படுகிறது. ஒட்டு மொத்தமாக சேலம் மாவட்டத்தில் 35 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில் 30 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாவட்டங்களான திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் கொரோனாவிலிருந்து முழு விடுதலையாகியுள்ளன. தொடக்கத்தில் இந்த மாவட்டங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகமிருந்தது. ஆனால் தற்போது அவற்றிலிருந்து கொங்கு மாவட்டங்கள் முழுமையாக மீண்டு இருக்கிறது.















