உலக அளவில் கொரோனா நோயால் 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சுமார் 1.10 லட்சம் பேர் கொரோனா வினால் பலியாகியிருக்கிறார்கள். அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சுமார் 20 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள்.
இத்தாலியிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது.
ஸ்பெய்ன், பிரான்ஸ், இங்கிலாந்து என வரிசைகட்டி நிற்கும் மரணப் பட்டியல் நாளுக்குநாள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.
உலக நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தினால், கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான வளர்ந்த நிலையில் உள்ள நாடுகள், தங்கள் நாட்டில் உள்ள ஓய்வுபெற்ற மருத்துவர்களையும் செவிலியர்களையும் மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றன.
உலகெங்கிலும் ராணுவ வீரர்களைப் போல மருத்துவர்கள் தங்களின் நாட்டிற்காகத் தொடர்ந்து கடுமையாக போராடி வருகிறார்கள். இத்தாலியில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்த நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்ததாக, அந்நாட்டு தேசிய மருத்துவர் சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்று பணிக்குத் திரும்பிய பணியாளர்களும் இதில் வெகுவாக உயிரிழந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
52 நாடுகளில், கடந்த 8-ம் தேதி வரை பதிவு செய்த விவரம் இது. முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.