தமிழக அரசுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய தூண்டுகிறார்கள்;ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஆரோகியதாஸ் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில் அவர்,
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை , பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர் சங்க கூட்டமைப்பு உள்பட 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் அங்கம் வகிக்கின்றனர்.
தற்போது “ஜாக்டோ ஜியோ” கூட்டமைப்பு தலைவர்கள் தமிழக அரசுக்கு எதிராக வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில் அரசு பணியில் இருக்கும் ஆசிரியர்களையும், அரசு வேலைபார்ப்பவர்களையும் ஈடுபடுத்த தூண்டப்படுகிறார்கள். இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் , கண்டிக்கவும் செய்கிறோம்.
நாங்கள் கோரும் அடிப்படை கோரிக்கைகள் ;
பழைய ஓய்வூதிய திட்டம், சிறப்பு காலமுறை ஊதியம், பனி நிரந்தரம், இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதிய உயர்வு ஆகிய 7 அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“ஜாக்டோ ஜியோ” கூட்டமைப்பை தலைமை தாங்கி நடத்துபவர்கள் அரசு பணியில் இல்லாதவர்கள், இவர்கள் அரசு பணியில் இருப்பவர்களை தங்கள் வேலை செய்ய விடாமல் தொந்தரவு ஏற்படுத்துகிறார்கள். எனவே அவர்கள் தலைமையில் செயல்படும் ஆசிரியர் சங்கங்களின் பதவியையும், அங்கீகாரத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
“ஜாக்டோ ஜியோ” அமைப்பினரின் பேச்சை கேட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அப்பாவி ஆசிரியர்களின் மீது போடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும். மேலும் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட அரசு ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் தமிழக அரசு விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தரப்பில் அனைவரின் கோரிக்கைகளையும் கூறினார்.