குதிரை பேரத்திற்கு இன்னொரு பெயர் காங்கிரஸ்..! குமாரசாமி குற்றச்சாட்டு!
Former CM kumarasamy condemns congress activities
பெங்களூரு:
குதிரை பேரத்திற்கு இன்னொரு பெயர் காங்கிரஸ் என்று குமாரசாமி கடும் விமர்சனத்தை கூறியுள்ளார்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தைக் காப்போம் என்ற பெயரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்க்க முயற்சி செய்வதாக பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளது. ஆனால் இதற்கு முன் காங்கிரஸ் என்ன செய்தது?
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்த பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏக்களை கட்சியில் சேர்க்கவில்லையா?. இது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது ஆகாதா? அரசுக்கு ஆதரவு அளிக்கும் ஒரு கட்சியின் எம்எல்ஏக்களை அப்படியே கட்சியில் சேர்த்துக் கொள்வது தான் ஜனநாயகமா?
ஒரே கருத்து உடைய கட்சிகளின் எம்எல்ஏக்களை நீங்கள் உங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்வதாக இருந்தால், உங்களை யார் ஆதரிப்பார்கள்? இந்த தவறு உங்களுக்கு தெரியவில்லையா?
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவிக்காக எங்கள் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கவில்லையா? இதன்மூலம் எங்கள் கட்சியை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சி செய்யவில்லையா?
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் விஷயத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. 2 கட்சிகளுமே கிரிமினல். எஸ்.எம்.கிருஷ்ணா முதல் மந்திரியாக இருந்தபோது எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கவில்லையா? 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு பிறகு எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லையா?
எனது இந்த கேள்விகளுக்கு காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும். 2004-ம் ஆண்டு எங்கள் கட்சியை உடைக்க காங்கிரஸ் முயற்சி செய்தது. அதனால் தான் எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை ஒன்றுசேர்த்து அழைத்துச் சென்று தரம்சிங் தலைமையில் இருந்த கூட்டணி அரசை கவிழ்த்தேன் என்றார்.