தொழிலாளர்கள் போராட்டம்..! போலீசார் காயம்…! நிவாரணம் தரும் முதல்வர்
Chief minister edapaddi palanisamy statement

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல நடத்திய போராட்டத்தில் காயமடைந்த போலீசாருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இத்தொழிலாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, அம்மாநில அரசின் முறையான அனுமதியுடன், படிப்படியாக அனுப்பி வைக்க தமிழக அரசு அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரை, சுமார் 13 ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் மே 9ம் தேதி அணுமின் நிலைய வாயில் அருகில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு உடனடியாக செல்ல வேண்டும் என கோஷமிட்டனர்.
அவர்களிடம் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை எடுத்து கூறி கலைந்து செல்ல போலீசார் கேட்டுக் கொண்டனர். ஆனால் சில தொழிலாளர்கள் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டதில், லேசான காயமடைந்த கூடங்குளம் காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவுக்கு ரூ.1 லட்சமும் மற்றும் பலத்த காயமடைந்த காவல் வாகன ஓட்டுநர் சக்திவேலுக்கு ரூ.2 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.















