கலைஞர் மு. கருணாநிதி சிலை திறப்பு விழா.. சரத்பவாருக்கு ஸ்டாலின் அழைப்பு..
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று டெல்லியில் பல கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். தற்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் சந்திப்பு நடத்தி உள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் கருணாநிதி சிலை வரும் 16-ம் தேதி திறக்கப்பட உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு பிரமாண்டமான முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. கருணாநிதி சிலையுடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவுக்கும் புதிய சிலை அமைக்கப்பட உள்ளது. மேலும் மிக பிரமாண்டமான தி.மு.க. கொடி கம்பம் ஒன்றும் அங்கு நிறுவப்பட உள்ளது. இதற்காகத்தான் ஸ்டாலின் பல அரசியல் தலைவர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.
நேற்றே ஸ்டாலின் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இந்த விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.
இன்று அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆகிய தலைவர்களை அடுத்தடுத்து சந்திக்க உள்ளார்.
இதன் ஒருகட்டமாக இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதற்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் கனிமொழியும் உடன் இருந்தார். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதாக சரத்பவார் உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் ஸ்டாலின் பாஜக தலைவர்களை இந்த விழாவிற்கு அழைப்பாரா என்று தகவல் வெளியாகவில்லை. அவர் பிரதமர் மோடியையோ, பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவையோ சந்திக்க நேரம் கேட்டதாக தகவல்கள் வரவில்லை.