கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேரவேண்டுமா? ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று ஆரம்பம்!
Arts, science college admissions starts today

சென்னை:
கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர்வதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்பில் சேர, ஒவ்வொரு கல்லுாரியிலும் விண்ணப்பம் வழங்கப்படும்.
இந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாகவும், தொற்று பரவல் ஏற்படுவதாலும், நேரடி விண்ணப்ப முறைக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் கலை கல்லுாரிகளில், பட்டப்படிப்பில் சேர, ஆன்லைன் விண்ணப்ப முறையை, தமிழக உயர் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, இன்று முதல், ஆன்லைனில் விண்ணப்ப பதிவுகள் துவங்குகின்றன. இணைய தளங்களில், மாணவர்கள், வரும், 31 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம்.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சான்றிதழ், குடும்ப ஆண்டு வருமான சான்று, ஜாதிச் சான்று போன்றவற்றை, 25ம் தேதி முதல், ஆகஸ்ட், 5 வரை பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல, தனியார் கல்லுாரிகளிலும், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும் என, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே, அரசு உதவி மற்றும் சுயநிதி கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர விரும்பும் மாணவர்கள், அந்தந்த கல்லுாரியின் இணையதளத்தில், நேரடியாக விண்ணப்பம் பதிவு செய்யலாம்.
















