பெங்களூரு
விவசாயக் கடன் தள்ளுபடி மாபெரும் நகைச்சுவை எனபிரதமர் மோடி கூறியதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என கூறி இருந்தது. அது போலவே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து வருகின்றது.
இதற்கு பிரதமர் மோடி உள்ளிட பலரும் விமர்சனங்கள் எழுப்பி உள்ளனர். சமீபத்தில் மோடி ஒரு நிகழ்வில், ‘ விவசாயிகள் அரசின் கவனம் தங்கள் மேல் திரும்ப வேண்டும் என விரும்பும் போது கர்நாடக அரசு திமிராக நடக்கிறது.
அத்துடன் சாதாரண மக்கள் வளர்ச்சியை விரும்பும் போது அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒரு பரம்பரையை செல்வ செழிப்புடன் வைக்க விரும்புகிறார்கள். கர்நாடக அரசு அறிவித்துள்ள விவசாயக் கடன் தள்ளுபடி என்பது மாபெரும் காமெடி என்று கூறினார்.
இதற்கு கர்நாடக அரசு சார்பில் முதல்வர் குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதுவரை கடன் தள்ளுபடி திட்டத்தால் சுமார் 60000 விவசாயிகள் பலன் அடைந்துள்ள்ளனர். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இதுவரை நாங்கள் ரூ.350 கோடி பணம் அளித்துள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் மேலும் ரூ.400 கோடி பணம் செலுத்த உள்ளோம். இது பிரதமர் மோடிக்கு நகைசுவையாக தெரிகிறதா?
என்று முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.