ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையை ரத்து செய்ய முடியாது..! ஹைகோர்ட் திட்டவட்டம்!
Case against fastag dismissed in Chennai high court
சென்னை:
சுங்கச்சாவடியில் ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்குடன், ஃபாஸ்டேக் முறையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இதனால், ஃபாஸ்டேக் அடையாள அட்டையை இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஃபாஸ்டேக் கட்டண முறைக்கான அறிவிப்பாணைகளை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் கபிலன் மனோகரன் என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். மனுவில், ஃபாஸ்டேக் அட்டை பெற்று வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்கும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பான நம்பிக்கையான பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஃபாஸ்டேக் அடையாள அட்டையை இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் என்கிற புகாருக்கு எந்த ஆதரமும் இல்லை என்று தெரிவித்தனர். இதனையடுத்து மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.