ரஜினிகாந்துக்கு நான் ஏன் ஆதரவு சொல்லணும்…! அழகிரியின் ‘பளிச்’ அறிக்கை
MK alagiri explanation about rajini opinion
சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் ரஜினிக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று முக அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.
இது குறித்து நடிகர் ரஜினியின் கருத்து பெரும் வைரலானது. அதே நேரத்தில் அவரது கருத்தை ஆதரிப்பதாக முக அழகிரி கூறியதாக இணையத்தில் செய்திகள் வலம் வந்தன. ஆனால் இந்த கருத்து தம்முடையது அல்ல என்றும், ரஜினிக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் அழகிரி கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: மதுக்கடைகளை மீண்டும் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள் என்று நண்பர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை நான் ஆதரிப்பது போன்று என் படத்தோடு சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர்.
அதுகுறித்து நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. சமூக வலை தளங்களில் எந்தக் கணக்கும் எனக்கு இல்லை. அதை நான் பயன்படுத்தவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.