ராபர்ட் வதேராவிடம் இன்று இரண்டாவது நாளாக நீடிக்கும் விசாரணை !

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது தொடரப்பட்ட சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி வழக்கின் விசாரணை இன்று இரண்டாவது நாளாக தொடருகிறது.

சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவிடம் (Robert Vadra) நேற்று டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரமாக விசாரணை நடத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெறுகிறது.
லண்டனில் பிரையன்ஸ்டன் பகுதியில் சொத்து வாங்கியதில் 1.9 மில்லியன் பவுண்டுகள் வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை பிரியாங்காவின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக் கூடாது என்று பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் கேட்டார். தொடர்ந்து ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அதோடு, பிப்ரவரி 6 ஆம் தேதி அமலாக்கத்துறையில் விசாரணைக்கு ஆஜராகவும் வைப்புத் தொகையாக ரூ.1 லட்சம் கட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா நேரில் ஆஜராகினார். 5 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், தம் மீதான புகார்களை ராபர்ட் வதேரா மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இன்றைக்கு மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது. வழக்கில் ஆஜராக வந்த வதேராவுடன் அவரது மனைவி பிரியங்கா காந்தியும் உடன் வந்தார்.
இந்த வழக்கு குறித்து வதேரா வழக்கறிஞர் கூறுகையில், ராபர்ட் வதேராவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார். இது அரசியல் ரீதியாக அவர் மீது போடப்பட்ட பொய்வழக்கு. இந்த குற்றச்சாட்டுகளை ராபர்ட் வதேரா எப்போதும் மறுத்தே வருகிறார். அமலாக்கத்துறை எப்போது மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறதோ அப்போது ஆஜராகுவார் எனத் தெரிவித்தார். இந்த வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் வருகிற 16 ஆம் தேதி வரை, ராபர்ட் வதேராவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
மேலும் வதேராவின் மனைவி பிரியங்கா காந்தி வதேரா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நேரடி அரசியலில் இறங்கினார். இதைத்தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ராபர்ட் வதேரா மீதான விசாரணை தீவிரம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.















