கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடருவோம் – ஜாக்டோ ஜியோ!
சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மணிலா ஒருங்கிணைப்பாளர் மாயன், மற்றும் சுப்பிரமணியன் போன்றோர் தலைமை வகித்தனர்.
மேலும் பல மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது மாநில ஒருங்கிணைப்பாளர் மாயன், மற்றும் சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது;
மாணவர்களை காரணம் காட்டி எங்களின் போராட்டத்தை கைவிட செய்ய பார்க்கிறார்கள். ஆனால் மாணவர்களின் படிப்பை வீணாக்குவது அரசாங்கமும், ஆளுங்கட்சியும் தான். எங்களை அழைத்து பேசினால் இந்த போராட்டம் பற்றி முடிவு எடுப்போம்.
இந்த அரசாங்கம் 9 கோரிக்கைகளையும் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த அளவிற்கு போராட்டம் நடத்தி ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றாமல் வெறும் கையோடு செல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அடக்கு முறையை ஏவி விடுகிறார்கள். பணிக்கு செல்லாவிட்டால் வேறு ஆட்களை வேலைக்கு நியமனம் செய்வோம் என்று சொன்னதால் பலர் பணிக்கு சென்றுள்ளனர்.
பயம் காட்டி எங்களை பணியவைக்க பார்க்கிறார்கள். நாங்கள் அநியாயமாக எதையும் கேட்கவில்லை? எங்கள் கோரிக்கை நியாயமானது. முதலமைச்சர் மற்றும் நிதியமைச்சர் எங்களை அழைத்து பேச வேண்டும்.முதல் நாளே எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் போராட்டம் இந்த அளவிற்கு செல்லாமல் தவிர்த்திருக்கலாம்.
கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் தொடரும் ;
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால் தேர்தல் பணிகளும், வளர்ச்சி பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதாக தவறான தகவல்களை கல்வித்துறை தெரிவிக்கிறது.
எங்களுக்கு ஆதரவாக பல சங்கங்களும் கை சேர்ந்துள்ளனர். எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் இந்த வேலைநிறுத்த போராட்டம் முடிவடையும். அதுவரை இந்த போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.