ஊரடங்கில் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்…! காவல் ஆணையர் விஸ்வநாதன் பேட்டி!
Chennai police commissioner viswanathan press meet
சென்னை:
சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கின் போது பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் கூறி உள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் இன்று முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.
சென்னையில் அனுமதியின்றி வாகனங்களில் வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந் நிலையில் சென்னை வாலாஜா சாலையில் வாகன சோதனையை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது வாகனங்களின் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணித்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும். வெளியில் நடமாடுபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். அத்யாவசியப் பொருட்களை வாங்க வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. மீறினால் பறிமுதல் செய்யப்படும்.
நோய்த்தொற்று பரவும் சூழல் இருந்தால் கடைகள் அடைக்கப்படும். வணிக நிறுவனங்களில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.