முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் !
60 ஆண்டுகளுக்குப் பிறகு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அத்திக்கடவு-அவினாசி திட்டம் அடுத்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருக்கிறார்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் நோக்கம்:
கடந்த 60 ஆண்டு காலமாக அவினாசி பகுதி தமிழகத்திலேயே கடும் வறட்சியின் கொடுமையை அனுபவித்து வரும் பகுதியாகும். இத்திட்டம் பாசன திட்டம் இல்லாமல் நிலத்தின் வழியாக ஏற்கனவே இயற்கையாக வந்து கொண்டிருந்த கால்வாய்கள் மூலம் வறண்டு கிடக்கும் குளம், குட்டைகளுக்கு நீரை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து எங்கள் பகுதின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருக்கிறது. காரமடை, மேட்டுபாளையம், அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கயம், ஊத்துகுளி, நம்பியூர், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 7 சட்டமன்ற தொகுதிகளைச் சார்ந்த 35 லட்சம் மக்களுக்கு பயன்படும் திட்டமாகும்.
1800 அடிக்குக் கீழே சென்றுவிட்ட நிலத்தடி நீர் மட்டம் இத்திட்டத்தினால் வெறும் 50 அடிக்கு வந்துவிடும். மின்செலவு, ஆழ்குழாய் கிணறு அமைக்கும் செலவு, மின் மோட்டார், ஒயர், பைப், ஆட்கள் கூலி என இவை அணைத்து செலவுகளும் விவசாயிக்கும், அரசுக்கும் மீதமாகும்.
1.25 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இத்திட்டத்திற்கு தேவைப்படுகிறது. பவானிசாகர் அணை கட்டப்பட்ட காலத்தில் இருந்து பல ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. அதில், குறிப்பாக 17 முறை குறைந்தபட்சம் 22 டிஎம்சி முதல் அதிகபட்சம் 109.23 டிஎம்சி வரை தண்ணீர் வெளியேறியுள்ளது. இவ்வாறு அணைகள் நிரம்பி உபரி ஆகும் நீரைத்தான் இத்திட்டதிருக்கு கேட்கிறோம்.
அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் கிடைக்கும் நீர் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 31 ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றியக் குளங்கள் மற்றும் 538 நீர் நிலைகளில் நிரப்பப்படும். இதன்மூலம் அப்பகுதிகளில் வாழும் 35 லட்சம் மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுவதுடன், 1.30 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
இத்தகைய வளமையான திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசுக்கும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் உழவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பா.ம.க. நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.