காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை(வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகை !
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி நாளை (வெள்ளிக்கிழமை) 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. எனவே அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய தலைவர்கள் பார்வையும் தமிழகம் பக்கம் திரும்பி உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை(வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகை தர உள்ளார். கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 ஊர்களில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரி வருகிறார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந்தேதி(நாளை) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி, மதியம் 1 மணிக்கு சேலம், மதியம் 3 மணிக்கு தேனி, மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்கிறார்.