மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு!

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் அதிமுக தரப்பில் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக – பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, இரு கட்சித் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஒப்பந்தம் குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தார்.
அப்போது ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது: பாமகவிற்கு 7 லோக்சபா தொகுதிகளை ஒதுக்கியுள்ளோம். ராஜ்யசபாவில் ஒரு சீட்டை பாமகவிற்கு வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில், இரு கட்சிகளும் தேர்தலில் இணைந்து செயல்படுவார்கள் என்று அறிவித்தார்.
தமிழகத்தில் தற்போது காலியாக இருக்கும் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு தெரிவிக்கும் என்பதையும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பிறகு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், 7 தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது பிறகு அறிவிக்கப்படும். இம்முறை எங்கள் கூட்டணி, தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறினார்.
2009-ம் ஆண்டுக்குப் பிறகு 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை அதிமுக – பாமக இணைந்து கூட்டாக எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.















