கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நடிகர்கள் பலரும் நிதிஉதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பலரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பில், உடனடியாக தேவைப்படும் அத்தியாவசிய நிவாரண பொருட்களை நடிகர் விஜய் சேதுபதி வழங்குகிறார். இது தொடர்பாக அவர் பேசுகையில்…”கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வசதி முழுமையாக திரும்பவதற்கு பத்து தினங்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் சார்ஜிங் டார்ச்லைட் ஆயிரக்கணக்கில் வழங்கப்படும். லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமைக் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை முழுவதுமாக புனரமைத்து தரப்படும். அவர்கள் தங்களின் பிள்ளைகள் போல் வளர்த்து வந்த தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை, மீண்டும் அவ்விடத்தில் புதிதாக நட்டு வைக்கப்படும். இதற்கான களப்பணிகளில் என்னுடைய ரசிகர்களும் ஈடுபடுவார்கள். நிவாரண நிதி தேவைப்படுபவர்களை ரசிகர் மன்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும்” என்றார். இதற்கிடையே கஜா புயல் மற்றும் கனமழையின் காரணமாக உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, அந்த குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஆன்லைனில் ரூ.10 லட்சம் செலுத்தியுள்ளார் ஷங்கர்.

புயல் பாதித்த மக்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை ரஜினி வழங்கியுள்ளார். ரூ.50 லட்சம் நிவாரணப் பொருட்கள் ரஜினி மக்கள் மன்றம் மூலம் அளிக்கப்படும் என கூறியுள்ளார்.

நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன்களான நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து 50 லட்சம் ரூபாய் நிதியை அளிக்க முன்வந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் 20 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.
பாடலாசிரியர் வைரமுத்து ரூ. 5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். அதோடு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியை விரைவாக செய்யுங்கள் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.















