சுதந்திர தின விழாவை எப்படி நடத்துவது? அதிகாரிகளுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை!
Pondy cm narayanasamy discussion over independence day
புதுச்சேரி:
சுதந்திர தின விழா தொடர்பாக அதிகாரிகளுடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
சுதந்திர தின விழாவினை சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாடுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா எதிரொலியாக இந்த விழாவில் வழக்கமாக இடம்பெறும் என்.சி.சி., என்.எஸ்.எஸ். மற்றும் அரசு தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி இல்லை. இந் நிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மட்டுமே இடம்பெறுகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களாக புதுச்சேரி காவல்துறையினர் உப்பளம் மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் செய்தி, விளம்பரத்துறை செயலாளர் சுந்தரேசன், இயக்குனர் வினயராஜ் ஆகியோருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.
அப்போது விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு தொடர்பாகவும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஸ்மிதாவுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டார்.