அரசுடமையாக மாறும் வேதா இல்லம்..! ஆளுநர் அறிவிப்பு!
Jayalalitha veda illam became government property
சென்னை:
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொது செயலாளருமான ஜெயலலிதாவின் வேதா இல்லம் சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. அவர் மறைந்துவிட்ட நிலையில் அவரது வேதா இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி இருக்கிறது.
இதனை தொடர்ந்து வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்க ஆளுநர் பன்வரிலால் புரோகித் அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளார். வேதா இல்ல அறக்கட்டளைக்கு முதலமைச்சர் தலைவராக இருப்பார்.
துணை முதலமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள், மக்கள் தொடர்பு தகவல் இயக்குநர் செயலாளராக இருப்பார் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இந்த அறக்கட்டளை வேதா இல்லத்தில் உள்ள பொருட்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வேதா இல்லம் மற்றும் அதில் உள்ள பொருட்கள் யாவும் அரசுடமையாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.