தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு..! ஐகோர்ட் வெளியிட்ட முக்கிய உத்தரவு!
Chennai high court issues order to disable persons voting
சென்னை:
தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றிய கோரிக்கையை பரிசீலிக்க மத்திய, மாநில அரசுகளுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவைகளுக்கு தேர்தல் நடத்தும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.
பெண்கள், எஸ்.சி., எஸ்.டி, பிரிவினர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது போல, மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க வேண்டும். இதுகுறித்து கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தலில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர்.
பின்னர், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டனர்.