0+0 =0 யோகியின் புதிய அரசியல் கணக்கு!!
லக்னோ:
பிரியங்காவின் வருகையால் ஒன்றும் ஆகாது. ஏனெனில் பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியத்தைச் சேர்த்தால் பூஜ்ஜியம்தானே என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆணவத்துடன் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, அக்கட்சியின் உத்தரப்பிரதேச பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் அரசியல் வருகை.. பற்றி யார் கருத்து சொல்கிறார்களோ.. இல்லையோ பாஜக தினம் தினம் ஏதேனும் ஒரு கருத்தை கூறி வருகிறது.
நேரடி அரசியலுக்கு வந்துள்ள பிரியங்காவை லோக்சபா தேர்தலில் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து பிரியங்காவை எந்த தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கலாம் என்ற ஆலோசனை நடந்து வருகிறது.
குறிப்பாக பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் அவருக்கு எதிராகவே பிரியங்கா வத்ராவை நிறுத்தவேண்டும் என்று உ.பி.காங்கிரசார் விரும்புவதாகவும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரும் அங்குதான் வருகிறது.
இதையடுத்து… மற்ற தலைவர்களை போல முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக கிண்டலடித்துள்ளார்.
பிரியங்காவின் நேரடி அரசியல் வருகை குறித்து யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
பிரியங்கா நுழைவு எங்கும் கொண்டு போகாது.
பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியத்தைச் சேர்த்தால் பூஜ்ஜியம்தானே வரும். காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய ஜீரோ.. அதில் யார் சேர்ந்தாலும் ஒன்றும் ஆகாது. அதிலிருந்து ஒன்றும் ஆகப்போவது இல்லை.
முன்னதாக பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, பீகார் அமைச்சர் விநோத் நாராயணன் ஜா ஆகியோர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது.
அவர்களை தொடர்ந்து யோகி ஆதித்யநாதின் கருத்துகளும் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.