வடகிழக்கு பருவமழை 24% குறைவு! – சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அதிர்ச்சி தகவல்!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 24% குறைவாக மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், “2018ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட மழையின் அளவு 24% குறைவாக பெய்துள்ளது.
தமிழகத்தில் இயல்பு நிலை 44% ஆக இருக்கும் நிலையில் தற்போது 34% என்ற அளவில் தான் மழை அளவு பதிவாகியுள்ளது.
நான்கு மாவட்டங்களில் இயல்பை விட குறைவான அளவு மழை பெய்துள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இயல்பைவிட 50% க்கும்குறைவாக மழை பெய்துள்ளது.
5 மாவட்டங்களில் 40 முதல் 50% க்கு குறைவாகவும், 5 மாவட்டங்களில் 30 முதல் 40% க்கு குறைவாகவும், 4 மாவட்டங்களில் 20 முதல் 30% க்கு குறைவாகவும், 11 மாவட்டங்களில் 1 முதல் 9% க்கு குறைவாகவும் மழை பெய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில்மட்டும் 11% அதிகமாக பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் இயல்பை விட 55% குறைவாக மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் உருவான புயல்களில் கஜா புயல் தவிர மற்ற புயல்கள் வேறு திசை நோக்கி சென்றதால் வடகிழக்கு பருவமழை குறைந்துள்ளது.
மேலும் எல்நினோ உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதுவும் மழை அளவு குறைந்ததற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மழை இல்லாமல் அதிகம் பாதிக்கப்பட்டது வட மாவட்டங்கள் தான். அப்பகுதி கடலோர மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு நிலையோ, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியோ வலுவாக இல்லை” என்று தெரிவித்தார்.