fbpx
Others

ராணிப்பேட்டை-சத்துணவில் குறைபாடு அமைப்பாளர் அதிரடி சஸ்பெண்ட்,பணியில் இல்லாத டாக்டருக்கு மெமோ .

‘உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்’ கீழ் ஆய்வு மேற்கொண்ட ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி, மாணவர்களுக்கு சத்துணவில் குறைபாடு இருந்ததால் அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்தும், பணியில் இல்லாத அரசு டாக்டருக்கு மெமொ வழங்கியும் அதிரடியாக உத்தரவிட்டார். சென்னையை தவிர்த்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் கடைசி புதன்கிழமையன்று குறிப்பிட்ட கிராமங்களில் 24 மணிநேரம் தங்கி, பொதுமக்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்து, நலத்திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு மனுக்களை பெறும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டம் நேற்று தொடங்கியது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டம் அரக்கோணம் ஒன்றியம் செம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட குருவராஜப்பேட்டையில் நேற்று தொடங்கியது. கலெக்டர் வளர்மதி பொதுமக்களிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது, அங்கு டாக்டர் இல்லாததை கண்டு கலெக்டர் அதிர்ச்சியடைந்தார். அங்குள்ள செவிலியர்களிடம், ‘இவ்வளவு நோயாளிகள் இங்கு உள்ளனர். டாக்டர் எங்கே போனார்?’ என கேட்டறிந்தார். அதற்கு டாக்டர் முகாமிற்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் டாக்டர் உரிய நேரத்தில் பணியில் இல்லாததை கருத்தில் கொண்டு அவருக்கு மெமோ வழங்க சுகாதார துறை துணை இயக்குனருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, கும்பினிபேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும்போது திடீரென கலெக்டர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களுக்கு முட்டை வழங்குவதில் குறைபாடு இருப்பது தெரியவந்தது. மேலும், சமையலறை மற்றும் உணவுப் பொருட்கள் வைக்கும் அறை போன்றவைகளை ஆய்வு செய்தார். அப்போது சரிவர பராமரிப்பு இன்றியும், இருப்பு குறைவாக இருப்பதையும், பதிவேடு சரியான முறையில் பராமரிக்காததை கண்டறிந்தார். இதனால் சத்துணவு அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட நிகழ்ச்சியின்போது, சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட், டாக்டருக்கு மெமோ வழங்க கலெக்டர் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close