புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் உச்ச பட்ச பாதுகாப்பு ஏற்பாடு!
சென்னை:
புத்தாண்டு தினத்தில், சென்னையில் இரவு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுகிறார்கள்.
மெரினா சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலப்படுத்தும் . புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலையில் வாகனங்களில் அதிக வேகமாக செல்வதால் விபத்துக்களும் அதிகரிக்கின்றன.
சென்னை நகரில் நட்சத்திர ஓட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
மெரினா கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடுவார்கள் .
ஆகவே விபத்து மற்றும் அசம்பாவிதங்கள் இல்லாத புத்தாண்டை கொண்டாடுவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் விதித்திருக்கின்றனர்.
நட்சத்திர ஓட்டல்களில் ஆடல் பாடலுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெறும். அங்கு நள்ளிரவு 1 மணி வரையே புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
நள்ளிரவு 12 மணியளவில் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் மத்தியில் எல்லா வருடமும் போலீஸ் கமிஷனர் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடுவது வழக்கம்.
அதேபோன்று இந்த ஆண்டும் நள்ளிரவு 12 மணிக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மெரினா கடற்கரையில் கேக் வெட்டி கொண்டாடுகிறார். அதன் பின்னர் அங்குள்ள மக்களுக்கு கேக் வழங்கப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்ட அனுமதி கிடையாது.
அதனை மீறி குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
இப்போதைய தகவலின்படி சென்னையில் இரவு முழுவதும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளார்கள்.
இரவு 8 மணி முதல் 12 மணிவரை ஒரு ஷிப்டாகவும், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணிவரை வேறொரு ஷிப்டாகவும் போலீசார் பணிபுரிய உள்ளனர்.
பைக் ரேசில் ஈடுபடுபவர்களை தடுக்க போலீசார் தனியாக குழு அமைத்து களமிறங்குகின்றனர்.
இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்வதை தடுக்க முக்கிய மேம்பாலங்கள் மூடப்படுகின்றன.
முக்கிய சாலைகளில் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுகின்றனர். மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.