fbpx
Others

 நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உறை பனி விழுந்தது..

 நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்றும் உறை பனி விழுந்தது. தொடர்ந்து பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் கடும் குளிரால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதி முதல் நீர் பனி விழும். தொடர்ந்து நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் உறை பனி விழத்துவங்கும். இம்முறை நவம்பர் மாதம் வரை நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வந்த நிலையில், உறை பனி விழுவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த மாதம் ஒரு சில தினங்கள் உறை பனி விழுந்தது.பின், நாள்தோறும் நீர் பனி காணப்பட்டது. இதனால் மாலை நேரங்களில் குளிர் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீலகிரியில் பல்வேறு பகுதிகளிலும் உறை பனி கொட்டி வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உறை பனி காணப்பட்டது. குறிப்பாக, நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உறை பனி விழுந்தது. ஊட்டியில் தாவரவியல் பூங்கா, காந்தல், தலைக்குந்தா, எச்பிஎப், பைக்காரா, ஷூட்டிங் மட்டம், அவலாஞ்சி மற்றும் கிளன்மார்கன் போன்ற பகுதிகளில் நேற்றும் உறை பனி விழுந்தது.புல்வெளிகள், வாகனங்களில் உறை பனி படர்ந்து காணப்பட்டது. குதிரை பந்தய மைதானத்தில் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் வெப்பநிலை மிகவும் குறைந்தது. நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 23 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலை 1 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. அவலாஞ்சியில் 0 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகி இருந்தது.இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் நிலவியது. தேயிலை தோட்டம், மலைக்காய்கறி தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் குளிரால் பாதிக்கப்பட்டனர். ஊட்டி வந்துள்ள சுற்றுலா பயணிகள் காலை நேரங்களில் குளிரின் காரணமாக அறைகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கினர். குளிரை பொருட்படுத்த முடியாமல், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பலரும் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close