மத்திய அரசின் சுகாதார திட்டம்- 8 மாநிலங்களில் பேறுகால இறப்பு வீதம் குறைப்பு
இந்திய தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014-16-ஆம் ஆண்டில் பேறுகால இறப்பு 130-ஆக இருந்ததாகவும், 2018-20-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அது 97-ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதாரக் கொள்கையின் அடிப்படையில் பேறுகால இறப்பை 100-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதை இந்தியா எட்டியுள்ளதாகவும், தற்போது 2030-ஆம் ஆண்டுக்குள் பேறுகால இறப்பை 70-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சராசரியை விட குறைவான அளவே பேறுகால இறப்பு விகிதம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது புதிய மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும், மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு தரமான சிகிச்சை மற்றும் பராமரிப்பை உறுதி செய்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவரது டுவிட்டர் பதிவை சுட்டி காட்டியுள்ள பிரதமர் மோடி, பேறு கால தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளதற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. இந்த மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து, நமது செயல்பாடுகள் வலுவாக உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் பேறுகால இறப்புவீதம் குறைந்துள்ளதாக இந்திய தலைமை பதிவாளர் சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாதிரி புள்ளிவிவர பதிவு அடிப்படையில், 2014-2016-ம் ஆண்டில் பேறுகால இறப்பு 130 ஆகவும், 2015-2017-ம் ஆண்டில் 122 ஆகவும், 2016-2018-ல் 113 ஆகவும், 2017-2019-ல் 103 ஆகவும், 2018-2020-ம் ஆண்டில் 97 ஆகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டியுள்ளார். தேசிய சுகாதார கொள்கையின் அடிப்படையில் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு பேறுகால இறப்பை 100-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த இலக்கை முன்பு 6 மாநிலங்கள் எட்டியிருந்த நிலையில் தற்போது 8 மாநிலங்கள் எட்டியுள்ளன. அதன்படி கேரளாவில் 19, மராட்டிய மாநிலத்தில் 33, தெலுங்கானாவில் 43, ஆந்திராவில் 45, தமிழகத்தில் 54, ஜார்கண்டில் 56, குஜராத்தில் 57, கர்நாடகத்தில் 69 என்ற அளவில் பேறுகால இறப்பு வீதம் உள்ளது. இந்த நிலையில் 2030-ம் ஆண்டுக்குள் பேறுகால இறப்பை 70-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. 2014-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்ட மத்திய அரசின் சுகாதார திட்டங்கள் பேறுகால இறப்பை குறைத்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.