புதுச்சேரியில் கொரொனோ நிவாரணம் மீண்டும் அறிவிப்பு!
புதுச்சேரியில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொரொனோ நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது;
தொழிற்சாலைகளை அவசரமாகத் திறக்க வேண்டிய அவசிய மில்லை. ஏற்கெனவே புதுச்சேரி அரசு அறிவித்தபடி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ், அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் 10 தொகுதிகளிலும், காரைக்காலில் 2 தொகுதிகளிலும் அரிசி வழங்கப்படுகிறது.
பாக்கி உள்ள தொகுதிகளுக்கு விரைவில் அரிசி வழங்கப்படும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்குவதற்கான கோப்பு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஒப்புதல் கிடைத்ததும் அவர்களுக்கும் வழங்கப்படும்.
கொரொனோ ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இதன்மூலம் 28,160 தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்.
இதேபோல, கட்டிடத் தொழிலாளர்களின் வைப்பு நிதியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
இதன் மூலம் 42,357 கட்டுமானத் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
இந்தத் தொகை ஏப்.22-ம் தேதி இன்று முதல் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.
மத்திய அரசு, புதுச்சேரி மாநிலத்துக்கான கொரொனோ நிவாரண நிதியை வழங்கா விட்டாலும், மாநிலத்துக்கான நிதி ஆதாரத்தை கொடுக்க வில்லை என்றாலும், மாநில அரசு மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது.
மத்திய அரசிடம் மிகப்பெரிய அளவில் அரிசி, கோதுமை இருப்பில் உள்ளது. ரிசர்வ் வங்கியில் ரூ.10 லட்சம் கோடி உபரியாக உள்ளது.
அந்நிய முதலீடுகள், அந்நியச் செலாவணி கையிருப்பு 730 பில்லியன் டாலர் உள்ளது.
இவ்வளவு இருக்கும் நிலையில் மத்திய அரசு,
ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.
இவ்வாறு பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.