பொள்ளாச்சி ஜெயராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – கே சி பழனிசாமி !
பொள்ளாச்சி ஜெயராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என டெல்லியில் கே.சி. பழனிசாமி கூறியுள்ளார். மேலும் பொள்ளச்சி விவகாரம் தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் கே.சி. பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, ‘செக்ஸ் டார்ச்சர்’ செய்து மிரட்டிய வழக்கில், கைதான நான்கு பேர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது. முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் சபரிராஜன் 25, சதிஷ் 25, வசந்தகுமார் 24 ஆகியோரை போலீசார் பிப்., 25ல் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு, கடந்த 5-ம் தேதி கைது செய்யப்பட்டான். நால்வரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்து அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, அதைத்தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு மாற்ற தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.பழனிசாமி, “பொள்ளாச்சி ஜெயராமனை ராஜினாமா செய்ய முதல்வர் பழனிசாமி வலியுறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். அப்போது அவர் பேசுகையில், “பொள்ளாச்சி சம்பவம் என்பது எல்லோரின் மனதையும் கலங்கடிக்கும் சம்பவம். அ.தி.மு.க. பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள கட்சி. ஜெயலலிதா இருந்தால் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அதே போன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதனால் இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.