தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. கோடை விடுமுறைகள் முடிந்து ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் விடுமுறை நாட்களை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் பள்ளிகல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், பள்ளிகளுக்கு மேலும் 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதாக வதந்திகள் பரவியது. இதனால், பெற்றோர்களும், மாணவர்களும் உற்சாகமாக காணப்பட்டனர். மேலும், சொந்த ஊர் சென்றவர்கள் மேலும் சில நாட்கள் விடுமுறையில் இருக்கலாம் என்று நினைத்திருந்தனர்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை என்றும் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தார்.
பள்ளிகள் இன்று திறக்கப்படும் நிலையில், முதல் நாளான இன்றே இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், புதிய பஸ் பாஸ்கள் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாஸ்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழக அரசின் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடந்துநர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும், பள்ளிச்சீருடை அணிந்திருந்தாலே அவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.