கட்டுக்கடங்காத கொரோனா பரவல்..! கண்காணிப்பு போலீஸ் வசம் மாற்றம் என பினராயி விஜயன் தகவல்!
Kerala CM pinarayi vijayan announcement
திருவனந்தபுரம்:
கொரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்வதால் கண்காணிப்பு போலீஸ் வசம் மாற்றப்பட்டதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் சில தினங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தினமும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியும், ஆயிரத்தை நெருங்கியும் வருகிறது. கடந்த 31ம் தேதி 1,310 பேரும் 1ம் தேதி 1,120 பேரும் நேற்று 1,169 பேரும் நோயால் பாதிக்கப்பட்டனர்.
இது தவிர கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவுவதும் அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா பாதித்து 2 பேர் மரணமடைந்துள்ளனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 68 வயதான கிளீட்டஸ் என்பவரும், ஆலப்புழாவைச் சேர்ந்த 52 வயதான சசிதரன் என்பவரும் மரணமடைந்துள்ளனர்.
இந் நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி இருப்பதாவது: நோய் பரவலின் வேகம் அதிகரித்து வருவதால் இந்த பொறுப்பு தற்போது போலீஸ் வசம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த எஸ்பி தலைமையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தனிமையில் இருப்பவர்கள் வெளியே செல்வது மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது உட்பட நிபந்தனைகளை மீறுவது அதிகரித்து வருகிறது. எனவே இதுபோன்று நிபந்தனைகளை மீறுபவர்களைக் கண்டுபிடிக்க போலீஸ் கடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றார்.